காமசாஸ்திர சிற்பங்கள் நிறைந்த குளத்தை உதவி கலெக்டர் ஆய்வு


காமசாஸ்திர சிற்பங்கள் நிறைந்த குளத்தை உதவி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Sep 2018 10:00 PM GMT (Updated: 5 Sep 2018 9:25 PM GMT)

தண்டராம்பட்டு அருகே காமசாஸ்திரத்தை விளக்கும் சிற்பங்கள் நிறைந்த குளத்தை உதவி கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அந்தக் குளம் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.

தண்டராம்பட்டு,


திருவண்ணாமலை மாவட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவட்டமாகும். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பழமை வாய்ந்த கல்வெட்டுகள், அரிய வகை சிற்பங்கள், நடுகற்கள் போன்றவை அடிக்கடி கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் வேலூர் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக தானிப்பாடி அருகே சின்னியம்பேட்டை என்னும் இடத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் ஒரு குளம் உள்ளது. இந்தக் குளத்தின் கரையைச் சுற்றி காமசாஸ்திர சிற்பங்கள் ஏராளமாக செதுக்கப்பட்டுள்ளன. அந்தக் குளத்தைத் தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

அதேபோல் தண்டராம்பட்டு அருகே கீழ்ராவந்தவாடி என்ற கிராமத்தில் 45 சென்ட் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. அந்தக் குளத்தை மக்கள் காமசூத்திரா குளம் என அழைக்கின்றனர். அந்தக் குளத்தைச் சுற்றிலும் படிக்கட்டுகளில் காம சாஸ்திரத்தைக் குறிக்கும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அந்தக் குளம் வருவாய்த்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் பராமரிக்கப்படாததால், படிக்கட்டுகள் உடைந்து, சிதலமடைந்து வருகின்றன. இந்த அரிய சிற்பங்கள் நிறைந்த குளம் தூர்ந்துபோய், சிற்பங்கள் சிதையும் நிலையில் உள்ளன. அந்தக் குளத்தைப் பராமரித்து, வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் கீழ்ராவந்தவாடியில் உள்ள காமசாஸ்திரத்தை விளக்கும் குளத்தைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேல் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அந்தக் குளம் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும், வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். அந்த ஆய்வின்போது தாசில்தார் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் சம்பத் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story