நகராட்சி மேலாளரை கண்டித்து அலுவலர்கள்-ஊழியர்கள் போராட்டம்


நகராட்சி மேலாளரை கண்டித்து அலுவலர்கள்-ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2018 11:39 PM GMT (Updated: 6 Sep 2018 11:39 PM GMT)

திருத்தங்கல் நகராட்சி மேலாளரை கண்டித்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 120 பேர் போராட்டம் நடத்தியதால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி, 

திருத்தங்கல் நகராட்சி மேலாளரை கண்டித்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 120 பேர் போராட்டம் நடத்தியதால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தங்கல் நகராட்சி அலுவலக மேலாளராக பணியாற்றி வருபவர் வெங்கடாஜலபதி. இவர் கடந்த 1 வருடத்துக்கு முன்புதான் திருத்தங்கல் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக தொழிலாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தராமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பிற பிரிவு தொழிலாளர்கள், அலுவலர்கள் நகராட்சி என்ஜினீயர் மற்றும் கமிஷனரிடம் புகார் கூறி வந்தனர். ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் திடீரென ஒன்று கூடி நகராட்சி மேலாளர் வெங்கடாஜலபதிக்கு எதிராக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அவர்கள் நகராட்சி மேலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷம் போட்டனர். இந்த போராட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள், அலுவலக அதிகாரிகள் என 120 பேர் கலந்து கொண்டனர். இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நகராட்சி கமிஷனர் அறைக்கு முன்னர் வந்து அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் சுவாமிநாதன் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகராட்சி மேலாளரை இடமாற்றம் செய்யும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

அதன் பின்னர் திருத்தங்கல் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் பொன் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து மக்கள் பணி பாதிக்கும் வகையில் உங்கள் போராட்டம் இருக்கக் கூடாது. உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பார். அதனால் நீங்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். 

Next Story