7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sep 2018 11:34 PM GMT (Updated: 7 Sep 2018 11:34 PM GMT)

பாபநாசம் நேரடி நெல்கொள்முதல் நிலையம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாசம்,

பாபநாசத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டத்தில் மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும். விவசாயிகளின் குறுவை நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லுக்கு சாக்கு தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அறிவுறுத்த வேண்டும். தேங்கியுள்ள நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் ஏற்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்ற அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் புத்தூர் அயோத்தி, மாவட்ட செயலாளர் இளங்கோவன், சட்ட ஆலோசகர் பெல் மகாலிங்கம், பாபநாசம் ஒன்றிய துணை செயலாளர் மகாலிங்கம் மற்றும் திரளான பெண் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

Next Story