தூக்குப்போட்டு கணவன்-மனைவி தற்கொலை போலீசார் விசாரணை


தூக்குப்போட்டு கணவன்-மனைவி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Sep 2018 11:51 PM GMT (Updated: 7 Sep 2018 11:51 PM GMT)

கோடியக்காடு அருகே காட்டுப்பகுதியில் தூக்குப்போட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர் குளம் குடிசேத்தி தெருவை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி(வயது 60). விவசாயி. இவரது மனைவி செல்லமணி(55). கணவன்-மனைவி இருவரும் கடந்த வெள்ளிக் கிழமை டாக்டரை பார்த்து விட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றனர்.

அன்று முழுவதும் அவர்கள் இருவரும் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து தேடிப்பார்த்தும் அவர்களைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நாகை மாவட்டம் கோடியக்காடு சித்தர் கட்டம் அருகே காட்டுப்பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் தூக்கில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார்.

அப்போது அங்கு தெட்சிணாமூர்த்தியும் அவரது மனைவி செல்லமணியும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. தெட்சிணாமூர்த்தி தான் அணிந்து இருந்த வேட்டியிலும், செல்லமணி தான் கட்டி இருந்த சேலையிலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இருவருடைய உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. அவர்கள் இறந்து 4, 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்று தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இருவருடைய உடல்களையும் இன்று(சனிக்கிழமை) சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரும் எதற்காக அங்கு வந்து தற்கொலை செய்து கொண்டனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடியக்காடு அருகே காட்டுப்பகுதியில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story