ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு: ‘இனி எங்களது மகன் குற்றவாளி அல்ல’


ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு: ‘இனி எங்களது மகன் குற்றவாளி அல்ல’
x
தினத்தந்தி 8 Sep 2018 11:51 PM GMT (Updated: 8 Sep 2018 11:51 PM GMT)

ஓரினசேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு வெளியான நிலையில், இனி எங்களது மகன் குற்றவாளி அல்ல என்று மும்பையை சேர்ந்த இளைஞரின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

மும்பை,

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டு ஓரினசேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு வெளிவந்த நிலையில் மும்பையை சேர்ந்த 25 வயது இளைஞரான அர்னாப் நாண்டி தனது ஓரினசேர்க்கை வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதி உள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

2 வருடத்துக்கு முன்பு வரை நான் கூண்டிற்குள் அடைபட்டு கிடந்ததை போல் உணர்ந்தேன். எனக்கே என்னை பற்றி சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை.

என் நண்பர் நிகிலின் பிறந்தநாளின் போது, நான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்று சொல்வதற்கு எனக்கு தைரியம் வந்தது. இதை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

அதே நேரத்தில் எனது பெற்றோரிடம் இதை சொல்ல முடியாமல் தயங்கினேன். ஏனெனில் எனது குடும்ப சூழ்நிலை என்னை தடுத் தது. ஆனால் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவர்களிடம் கூறினேன். என் பெற்றோர் எதிர்க்கவில்லை.

6-ந் தேதி தீர்ப்பு வந்ததும் நான் வீட்டிற்கு வந்தேன். அப்போது, என் அம்மாவும், அப்பாவும் என்னை கட்டிப்பிடித்து கொண்டு எனக்கு வாழ்த்து கூறினார்கள். இனி என் மகன் குற்றவாளி கிடையாது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

எனது தாய் என்னிடம் இனி உனக்கு பெண் பார்க்க வேண்டியது இல்லை. பையன் தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story