மாவட்டம் முழுவதும் 622 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி


மாவட்டம் முழுவதும் 622 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி
x
தினத்தந்தி 11 Sep 2018 11:00 PM GMT (Updated: 11 Sep 2018 7:18 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இதுவரை 622 இடங்களில் விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். விநாயகர் சிலை விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.

நாமக்கல்,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே தெருக்கள், சாலையோரங்கள் மற்றும் வீடுகளில் சிலை வைத்து வழிபாடு நடத்தப் படுகிறது.

இந்த ஆண்டும் நாமக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 622 இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். சிலை வைக்கும் நபர்கள் அரசு விதிமுறைகளின் படி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போதும் விதிமுறைகளை மீற கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் நகரில் ஆங்காங்கே சாலையோரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் சிலைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் கடை வீதிகளில் விநாயகர் சிலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து சிலை தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

எங்களிடம் ½ அடி உயரம் முதல் 5 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. இவை ரூ.30 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் களிமண்ணில் சிலைகளை செய்வதால், நீர்நிலைகள் மாசடைவது இல்லை. மேலும் ரசாயன வர்ணங்களையும் நாங்கள் பூசுவது இல்லை. இருப்பினும் வடமாநிலத்தவர் சிலர் ‘பிளாஸ்டர் ஆப் பாரீஸால்’ செய்யும் விநாயகர் சிலைகளை விற்பனை செய்கின்றனர். அவர்களை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story