பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி


பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 12 Sep 2018 9:45 PM GMT (Updated: 12 Sep 2018 9:06 PM GMT)

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் மாணவிகள் பிரிவில் அரசு பள்ளிகளை சேர்ந்தவர்கள் முதலிடம் பிடித்தனர்.

பெரம்பலூர், 

அண்ணா பிறந்தநாள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிநேற்று காலையில் நடந்தது. சைக்கிள் போட்டி 13, 15, 17 ஆகிய வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது. சைக்கிள் போட்டியை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக்கூட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் 65 பேரும், மாணவிகள் 75 பேரும் பங்கேற்றனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் போட்டி பாலக்கரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவு அடைந்தது.

13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் பெரம்பலூர் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த விவேகானந்தன், 15 வயதுக்குட்பட்ட பிரிவில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அறிவுமதி, 17வயதுக்குட்பட்ட பிரிவில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த வேணுகோபால் ஆகியோர் சைக்கிள் போட்டியில் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நிதர்சனா, 15 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஷோபனா, 17 வயதுக்குட்பட்ட பிரிவில் பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த ராஜமாணிக்கம் ஆகியோர் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

இதையடுத்து பரிசளிப்பு விழா நடந்தது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிரமணியராஜா வரவேற்றார். முடிவில் தடகள பயிற்சியாளர் கோகிலா நன்றி கூறினார். 

Next Story