நீட் பயிற்சி வகுப்பை புறக்கணித்து முதுகலை ஆசிரியர்கள் போராட்டம்


நீட் பயிற்சி வகுப்பை புறக்கணித்து முதுகலை ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Sep 2018 11:00 PM GMT (Updated: 12 Sep 2018 10:32 PM GMT)

நாமக்கல்லில் நேற்று நீட் பயிற்சி வகுப்பை புறக் கணித்து முதுகலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி என 3 மையங்களில் நீட் தேர்வு தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 120 முதுகலை ஆசிரியர்களுக்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நீட் பயிற்சியில் இருந்து அரசு பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100 ஆசிரிய, ஆசிரியைகள் திடீரென பயிற்சியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த முதன்மை கல்வி அதிகாரி உஷா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் 1 மணி நேரம் எங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க, இந்த போராட்டத்தை நடத்துகிறோம். அதன்பிறகு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிறோம் என்றனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக அனைத்து பாட முதுகலை ஆசிரியர்கள் சார்பில் முதன்மை கல்வி அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :-

புதிய பாடத்திட்டம், புதிய வினாத்தாள் வடிவமைப்பு போன்ற மாற்றங்கள் இந்த கல்வி ஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளுக்கு கற்பித்தல் மற்றும் மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் அதிகநேரம் செலவிட வேண்டி உள்ளது.

மேலும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி போன்ற கூடுதல் பணிச்சுமை முதுகலை ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதால், வாரத்தில் 7 நாட்களும் ஓய்வின்றி, விடுமுறை இன்றி பணி செய்வது எங்களது கற்பித்தல் திறன், உடல்நலம் மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றை பாதிக்கும். எனவே நீட், ஜே.இ.இ. போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, பள்ளிக்கல்வித்துறை ஒரு ஒன்றியத்துக்கு 2 முதுகலை ஆசிரியர்களை மட்டுமே நீட் பயிற்சிக்கு நியமிக்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் நமது மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு சுமை ஏற்பட கூடாது என்பதற்காக ஒரு ஒன்றியத்துக்கு 4 முதுகலை ஆசிரியர்களை நியமித்து உள்ளோம் என்றார்.


Next Story