நாகூர் அருகே ஓட்டல் ஊழியருக்கு பாட்டில் குத்து


நாகூர் அருகே ஓட்டல் ஊழியருக்கு பாட்டில் குத்து
x
தினத்தந்தி 13 Sep 2018 9:45 PM GMT (Updated: 13 Sep 2018 10:29 PM GMT)

நாகூர் அருகே ஓட்டல் ஊழியரை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகூர், 


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கல்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 50). இவர் நாகூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ரமேஷ்பாபு வேலையை முடித்து விட்டு தனது நண்பர் பட்டுக்கோட்டை உடையார் தெரு அண்ணாநகரை சேர்ந்த ராஜ்குமார்(34) என்பவருடன் மதுக்கடையில் மதுகுடித்து விட்டு வாஞ்சூர் சோதனை சாவடி அருகில் வந்துள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் தனது கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து ரமேஷ்பாபுவை குத்தினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த ரமேஷ் பாபுவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். 

Next Story