ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Sep 2018 10:33 PM GMT (Updated: 13 Sep 2018 10:33 PM GMT)

பெரம்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

டீசல் விலை உயர்வால் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகனங்களின் (ரிக்) உரிமையாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்டுள்ள பெருத்த நஷ்டம் காரணமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. உதிரி பாகங்களின் விலையும், இரும்பு தளவாட கருவிகளான பிட், ராடு, ஹேமர் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துவிட்டது.

இதனால் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது 1 அடிக்கு ரூ.75 என பொதுவான கட்டணத்தை நிர்ணயம் செய்து அந்த கட்டணத்தை அனைத்து ரிக் வாகன உரிமையாளர்களும் வசூலிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகனங்களின் (ரிக்) உரிமையாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்தடுத்த நாட்கள் என தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரிக் வாகனங்களின் உரிமையாளர்கள் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ரிக் வாகனங்களின் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களும், 120-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக சங்கத்தின் மாவட்டத்தலைவர் வள்ளலார் அரவிந்தன், செயலாளர் ஓம்சக்தி சந்திரமோகன், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Next Story