திருச்செந்தூர், உடன்குடி பகுதிகளில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் இன்றும், நாளையும் நடக்கிறது


திருச்செந்தூர், உடன்குடி பகுதிகளில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் இன்றும், நாளையும் நடக்கிறது
x
தினத்தந்தி 14 Sep 2018 9:30 PM GMT (Updated: 14 Sep 2018 6:50 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஆறுமுகநேரி, 

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஆறுமுகநேரி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆறுமுகநேரி சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகளை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் வாகனங்களில் ஏற்றி, ஆறுமுகநேரி மெயின் பஜாருக்கு கொண்டு வருகின்றனர்.

பின்னர் மதியம் 2.30 மணிக்கு அங்கிருந்து விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று, திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

உடன்குடி

உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 15 விநாயகர் சிலைகளை இன்று (சனிக்கிழமை) காலையில் வாகனங்களில் ஏற்றி, உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் மேல்நிலைப்பள்ளி முன்பு கொண்டு வருகின்றனர். மதியம் 12 மணிக்கு அங்கிருந்து விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி கொட்டங்காடு, வேதகோட்டைவிளை, தாண்டவன்காடு, சிறுநாடார்குடியிருப்பு வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று குலசேகரன்பட்டினம் கடலில் விஜர்சனம் செய்கின்றனர். மாலை 4 மணிக்கு அதே வழித்தடத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 30 விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று, குலசேகரன்பட்டினம் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகளை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் மேல்நிலைப்பள்ளி முன்பு கொண்டு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி தைக்காவூர், தண்டுபத்து, பரமன்குறிச்சி வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று, திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 6 விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி, இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முன்பு கொண்டு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகளை மெயின் ரோடு, புது ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு கொண்டு வருகின்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் மாலையில் விநாயகர் சிலைகளை வாகனங்களில் வேம்பாருக்கு கொண்டு சென்று, கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 25 விநாயகர் சிலைகளை மாலை 5 மணிக்கு கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து ஊர்வலமாக செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு கொண்டு வருகின்றனர். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் விநாயகர் சிலைகளை வேம்பார் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

அகில பாரத இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 விநாயகர் சிலைகளை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முன்பிருந்து ஊர்வலமாக செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு கொண்டு வருகின்றனர். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் விநாயகர் சிலைகளை வேம்பார் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

ஆறுமுகநேரி, உடன்குடி பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லும் வழித்தடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story