கடந்த 15 நாட்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 50 ஆயிரம் பேர் மீது வழக்கு போலீஸ் கமிஷனர் தகவல்


கடந்த 15 நாட்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 50 ஆயிரம் பேர் மீது வழக்கு போலீஸ் கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:45 PM GMT (Updated: 14 Sep 2018 8:10 PM GMT)

கடந்த 15 நாட்களில் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 50 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெருநகர சென்னை போலீஸ் போக்குவரத்து பிரிவு சார்பில் ‘ஹெல்மெட்’ அணிவது குறித்து விவேகானந்தா காலை கல்லூரி மாணவர்களுக்கு நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு மாணவர்களிடம் ‘ஹெல்மெட்’ அணிவதின் அவசியம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் விபத்து கால அவசர சிகிச்சை பிரிவில், விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து கமிஷனர் நலம் விசாரித்தார்.

பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊர் காவல் படை வீரர் பால்ராஜ் என்பவரையும் சந்தித்து நலம் விசாரித்தார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

50 ஆயிரம் பேர்...

மோட்டார் சைக்கிள் மூலம் ஏற்பட்ட விபத்துக்களில் இந்த ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 228 பேர். இதில் 227 ‘ஹெல்மெட்’ அணியாமல் பயணித்து விபத்துக்குள்ளாகி இறந்தவர்கள். ‘ஹெல்மெட்’ அணிவதன் மூலம் விபத்தை தவிர்க்க முடியாது. ஆனால் உயிரிழப்பு ஏற்படாமல் நம்மை காத்து கொள்ளலாம். மாணவர்களாகிய நீங்கள் ‘ஹெல்மெட்’ அணிவது மட்டும் அல்லாமல் பிறரையும் ‘ஹெல்மெட்’ அணிய கட்டாயப்படுத்தவேண்டும். விபத்துக்களால் ஏற்படும் மரணத்தில் 70 சதவீதம் மோட்டார் சைக்கிள்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் பயணிப்பதால் ஏற்படுகின்றன. 15 நாட்களில் 50 ஆயிரம் பேர் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்றதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் ‘ஹெல்மெட்’ அணிவதை அபராதத்துக்காக மட்டும் பார்க்காமல் நமது கடமையாக கருதவேண்டும். நாளைய சமுதாயத்துக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது ‘ஹெல்மெட்’ அணிவதை ஒரு கலாசாரமாக ஆக்கவேண்டும். சாலை விதிகளை கடைபிடிப்பது நம்மை மட்டும் பாதுகாக்காமல் சாலையில் செல்லும் பிறரையும் பாதுகாக்க உதவும். நாளைய எதிர் காலம் மாணவர்களிடையே உள்ளது. அதனால் சாலை விதிகளை மதித்து, பிறரையும் மதிக்க சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி மற்றும் பெருநகர சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் (போக்கு வரத்து) அருண், இணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story