சமுதாய வளைகாப்பு விழா: கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்


சமுதாய வளைகாப்பு விழா: கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:01 PM GMT (Updated: 14 Sep 2018 10:01 PM GMT)

அரியலூரில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. சீர்வரிசை பெற்ற பெண்களுடன் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

பெரம்பலூர்,

சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். பெரம்பலூர் தொகுதி எம்.பி.மருதராஜா, எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமுதாய வளைகாப்பு விழாவிற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு முன்னதாக உடல் நல பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, ரத்தப்பரிசோதனை, உயரம், எடை ஆகியவை மருத்துவக்குழுவினரால் சோதனை செய்யப்பட்டது. மேலும் கர்ப்ப காலத்்தில் 10 கிலோ எடை கூடுதல், சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளுதல், தாய்ப்பாலின் அவசியம், மருத்துவமனை பிரசவம், சீம்பாலின் அவசியம், மற்றும் இணை உணவு குறித்து மருத்துவ அலுவலரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு போடப்பட்ட இருக்கைகளில் வரிசையாக கர்ப்பிணி பெண்கள் அமர வைக்கப்பட்டனர். அப்போது கலெக்டர் சாந்தா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணி பெண்களின் கன்னத்திலும், கைகளிலும் சந்தனமும், நெற்றியில் சந்தனம், குங்குமத்தை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள், பணியாளர்கள் வைத்து விட்டனர். பின்னர் கர்ப்பிணி பெண்களின் கைகளில் வளையல்கள் போட்டு விடப்பட்டது.

பின்னர் கர்ப்பகால பராமரிப்பு குறித்த கையேடு மற்றும் சிறிய சில்வர் குடம், சில்வர் தட்டு, சேலை, வாழைக்காய், சந்தனம், குங்குமம், வளையல், ரோஜா பூ மற்றும் கடலை மிட்டாய் பாக்கெட் அடங்கிய சீர்வரிசை பொருட்களை கர்ப்பிணி பெண்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

அப்போது கர்ப்பிணி பெண்களின் கணவன்மார்கள் தங்களது மனைவிக்கு வளைகாப்பு விழா நடைபெறுவதை செல்போனில் வீடியோவாக எடுத்து மகிழ்ந்தனர். விழாவில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகை உணவு வகைகள் வழங்கப்பட்டது. சமுதாய வளைகாப்பு விழாவில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை தாலுகாக்களில் இருந்து தலா 120 கர்ப்பிணி பெண்களும், வேப்பூரில் இருந்து 160 கர்ப்பிணி பெண்களும் என 520 பேர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பூங்கொடி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பிரேமஜெயம், அருணா, பூமா, மீனாட்சி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில், கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்த கொறடா தாமரை ராஜேந்திரன் அரியலூர் தாலுகாவை சேர்ந்த 160 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து, தாம்பூலம் தட்டு, ஜாக்கெட் துணி, பழம், பூ, வெற்றிலைப்பாக்கு, குங்குமம், வளையல்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினர். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான கலவை சாதங்கள் அடங்கிய உணவு வழங்கப்பட்டது.

விழாவில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி, கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Next Story