விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஊர்வலமாக எடுத்து சென்று சிலைகள் கரைப்பு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஊர்வலமாக எடுத்து சென்று சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 14 Sep 2018 10:14 PM GMT (Updated: 14 Sep 2018 10:14 PM GMT)

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைத்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி நகர இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு இந்து முன்னணி நகர தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். இதில் பாரதீய ஜனதா கட்சி மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு, இந்து முன்னணி கொடியை ஏற்றி வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். இதேபோல சீனிக்கடை முக்கம், கடையத்தெரு, தென்னகர், யாதவர் தெரு, நரங்கியப்பட்டு, சுக்கிரன்விடுதி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோல கறம்பக்குடி செட்டியார் தெருவில் உள்ள மங்கல விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு பால், சந்தனம், பன்னீர், தயிர், நெய், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்னவாசல் மேட்டு தெருவில் உள்ள இந்திரா காலனி மங்கல விநாயகர் கோவிலில் பக்தர்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விநாயகர் சிலையை வாகனத்தில் ஏற்றி, மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று, அன்னவாசல் சிவன் கோவில் அருகே உள்ள குளத்தில் கரைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமயம் பாப்பாவயல் கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரமும், தீப ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பாக ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருமயத்தை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல திருமயம் சிவன் கோவிலில் உள்ள விநாயகர் கோவில், பனையப்பட்டி, ராங்கியம், மேலூர், நச்சாந்துபட்டி, வீ. லெட்சுமிபுரம், ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு விநாயகர் கோவிலில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மணமேல்குடி பகுதி சிவன்கோவில் தெரு, அண்ணாநகர், தண்டலை, நல்லூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு மின் விளக்கு அலங்காரம், தோரணம் கட்டப்பட்டு விநாயகருக்கு பால், தயிர், பழங்கள் மற்றும் திருநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று சிலைகள் டிராக்டர்கள் மூலம் மணமேல்குடி கடைவீதி வழியாக தார தப்பட்டைகள் முழங்க மணமேல்குடி கோடியக்கரை கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. தொடர்ந்து மணமேல்குடி கோடியக்கரை கடலில் மொத்தம் 13 சிலைகள் கரைக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் செய்திருந்தினர் .

Next Story