மின் மீட்டரில் தில்லுமுல்லு செய்து மின்சாரம் திருட்டு


மின் மீட்டரில் தில்லுமுல்லு செய்து மின்சாரம் திருட்டு
x
தினத்தந்தி 14 Sep 2018 10:18 PM GMT (Updated: 14 Sep 2018 10:18 PM GMT)

செய்யாறு பகுதி கிராமத்தில் மின் திருட்டு தடுப்பு குழுவினர் நடத்திய ஆய்வில் மின்மீட்டரில் தில்லுமுல்லு செய்த மின்நுகர்வோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்யாறு, 


செய்யாறு தாலுகா வன்னியதாங்கல் கிராமத்தில் வசிக்கும் முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் மின் இணைப்பில் தில்லுமுல்லு செய்து மின் இணைப்பு மீட்டர் சரியாக ஓடவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதியில் மற்ற வீடுகளில் வரும் மின் கட்டணத் தொகையை விட அந்த வீட்டில் மின் கட்டணம் மிகவும் குறைவாக செலுத்தப்பட்டு வந்தது.

அனைத்து வசதிகளும் இருக்கக் கூடிய வீட்டில் மின் கட்டணம் எப்படி குறைவாக வருகிறது என மின் வாரியத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நேற்று மதியம் 2 மணியளவில் காஞ்சீபுரத்தை சேர்ந்த மின் திருட்டு தடுப்பு குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கிளியாத்தூர், வன்னியதாங்கல் ஆகிய கிராமங்களில் சென்று வீடுகளில் மின் இணைப்புகளை சோதனையிட்டனர்.

வன்னியதாங்கல் பகுதியில் சம்பந்தப்பட்ட பிரமுகர் வீட்டில் சோதனை செய்தபோது மின்மீட்டரில் தில்லுமுல்லு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய மின் திருட்டு தடுப்பு படையினர் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் இப்பகுதியை சேர்ந்த உதவி பொறியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு அவசர, அவசரமாக காரில் சென்று விட்டனர். இது தொடர்பாக பல்லி துணை மின் நிலையத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர்களும் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மின்திருட்டு தடுப்பு குழுவினர் பதில் கூறாமல் சென்றது ஏன் என புரியாத புதிராக உள்ளது. 

Next Story