உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் அணையில் நீர்க்கசிவை தடுக்க புதிய திட்டம்


உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் அணையில் நீர்க்கசிவை தடுக்க புதிய திட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:18 PM GMT (Updated: 14 Sep 2018 11:18 PM GMT)

உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் அணையில் நீர்க்கசிவை தடுக்க புதிய திட்டத்தை செயல்படுத்துவது பற்றி இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

ஜீயபுரம்,

முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஆற்றுக்குள் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு பாறாங்கற்களும் கொட்டப்பட்டன.

நீரின் வேகம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டாலும் நீர் கசிந்து செல்வதை முற்றிலுமாக இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில் சென்னையில் இருந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழில் நுட்ப குழுவினர் நேற்று அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளையும், சீரமைப்பு பணிகள் நடந்து வருவதையும் பார்வையிட்டனர்.

பார்வையிட்டு முடிந்த பின்னர் அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீர்க்கசிவை முழுமையாக தடுக்க வேண்டுமானால் ஆற்றுக்குள் இரும்பு குழாய்களால் பில்லர் அமைத்து இடைப்பட்ட பகுதியில் இரும்பு பாளங்களை (கர்டர்) சொருகினால் தான் தண்ணீர் வீணாக வெளியேறி செல்வதை தடுக்க முடியும். தண்ணீர் வெளியேறி செல்வதை முழுமையாக தடுத்து நிறுத்தினால் தான் புதிய கதவணையையும் கட்ட முடியும் என கூறி இருக்கிறார்கள்.

இந்த குழுவினரின் புதிய திட்டம் பற்றி பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ். கே. பிரபாகர் முக்கொம்பில் இன்று ஆய்வு நடத்த உள்ளார்.

அப்போது இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவது பற்றி விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Next Story