இணையதளம்: புதிய பாதையா? கொடிய போதையா?


இணையதளம்: புதிய பாதையா? கொடிய போதையா?
x
தினத்தந்தி 15 Sep 2018 6:02 AM GMT (Updated: 15 Sep 2018 6:02 AM GMT)

இன்றைய மனித வாழ்க்கையில், பெரியவர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என எல்லோருடைய பொன்னான நேரத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பது இணைய தளம் என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு தான்.

அதன் விளைவு நம் சமுதாயத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

பத்திரிகைகள் மிகச் சிறந்த ஊடகம்! அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை. பத்திரிகைகளுக்கு எல்லா ஊர்களிலும் நிருபர்கள் இருப்பார்கள். அவர்கள் சேகரித்துக் கொடுக்கும் செய்திகளை நன்கு ஆய்வு செய்து, அதை வெளியிட்டால் சமுதாயத்தில் எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை எல்லாம் யோசித்து, படிப்பும் உலக அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் வெளியிடுவார்கள். அப்படித்தான் நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ பத்திரிகைகளில் வெளிவரும்.

அதனால் அவை சமுதாயத்தில் தேவைக்கு அதிகமான விளைவுகளை ஏற்படுத்தி விடாது. நியாயமான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

இணைய தளம் வந்த பிறகு மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டு விட்டது. ஒரு விலை உயர்ந்த இணையதள வசதி உள்ள செல்போனை பயன்படுத்த தெரிந்தால் போதும்! படிப்பு, அறிவு, அனுபவம் எதுவுமே வேண்டாம். எல்லோருமே பத்திரிகை ஆசிரியர்கள் மட்டுமல்ல, என்ஜினீயர்கள், டாக்டர்கள் தான். கண்ணதாசன்கள், ஜெயகாந்தன்கள் தான்!

தமிழில் எழுத்துகள் தெரிந்தால் போதும், எல்லோரும் மேதைகள் தான். வல்லினம், இடையினம் தெரியாத, உயர்நிலை பள்ளி கூட தாண்டாத இந்த மேதைகள் பல அவதாரம் எடுத்து, இணைய தளத்தில் போடும் பதிவுகள் கோடிக் கணக்கான இளைஞர்களின் கைகளில் இருக்கும் செல்போன்களுக்கு பல ரூபங்களில் போய் சேருகிறது.

பத்திரிகை செய்திகள் கூட குறிப்பிட்ட நேரத்தில் தான் வரும். இவர்கள் போடும் பதிவுகள் 24 மணி நேரமும் வந்து கொண்டே இருக்கிறது.

8-ம் வகுப்பு படித்த டாக்டர், 5-ம் வகுப்பை தாண்டாத என்ஜினீயர்கள் போடும் பதிவுகளை எல்லாம் உண்மை என்று நம்பி செயல்படும் மக்கள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள். ஒழுங்காக கையெழுத்துக் கூடப் போடத் தெரியாதவன் சொல்வதை எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சொல்வதாக நினைத்துக் கொண்டு அந்த வைத்தியத்தை செய்து பார்க்கும் மக்கள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணம், வீட்டிலேயே ஆண் பிரசவம் பார்த்தது.

இணையதளத்தில் வரும் பதிவுகளில் 90 சதவீதம் அபத்தம். இந்த அபத்தங்களை உண்மை என்று நம்பி அதை ஆதரித்து பதிவிடுபவர்கள் 50 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.

சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய இளைஞர்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் போதைக்கு அடிமையானவர்களால், அவர்களின் குடும்பம் மட்டுமே கெடும். ஆனால் இந்த இணையதள போதையர்கள் அவர்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு எதிர்படும், அவர் களுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பலர் வாழ்க்கை வீணாகி விடுகிறது.

இணையதளத்தில் நன்மை இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது...! அதை உணர்ந்து செயல்படுத்த அறிவும், பக்குவமும் வேண்டும். இப்போது இளைஞர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவது எல்லாம் பொழுது போக்குக்கு தான்.

ஒவ்வொரு இளைஞனுக்கும் எதிர் வீட்டில் இருக்கும் இளைஞனோடு நட்பு பாராட்ட நேரம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கண்ணால் ஒரு முறை கூட பார்க்காத நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தெரியாத நண்பர்கள் தான் பல நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இதில் ஆண்-பெண் நட்புகள் ஏராளம். இதனால் பல பெண்கள் வாழ்க்கை நாசமாவது தாராளம்.

தெருவில் நடப்பதைப் பார்ப்பது, கண்ட புத்தகங்களைப் படிப்பது, பிறர் சொல்வதை கேட்பது இவைகளால் மட்டும் யாரும் டாக்டரோ, என்ஜினீயரோ ஆகி விட முடியாது.

முறையான படிப்பு, பயிற்சி, அனுபவம் இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் ஒருவன் முன்னுக்கு வர முடியும். அப்படிப் பட்டவர்கள் தங்களின் அனுபவத்தை பதிவாகப் போட்டால் தான் அது மற்றவர்களுக்குப் பயன்படும்.

இப்படிப் பட்ட பதிவுகள் இணைய தளங்களில் 10 சதவீதம்தான் இருக்கும். இதை புரிந்து கொள்ளும் பக்குவம் நம் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வரும்வரை இணையதளங்களால் பாதிப்புகள் தான் அதிகம். இதை சொல்வதால் அறிவியலை எதிர்ப்பதாக அர்த்தம் இல்லை.

அறிவியல் நல்ல பாதையையும் காட்டும். தீயப்பாதையையும் காட்டும். அதில் நீங்கள் எந்த பாதையை தேர்வு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நல்ல பாதையை காட்டுவதற்கு பெற்றோர் எப்போதும் துணை நிற்க வேண்டும். தங்களின் பிள்ளைகள் எப்போதும் செல்போனும் கையுமாக இருக்காமல் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமையாகும்!

- எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன்

Next Story