அமைச்சர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


அமைச்சர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 15 Sep 2018 10:15 PM GMT (Updated: 15 Sep 2018 7:15 PM GMT)

பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாவிட்டால் அமைச்சர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.

சுந்தரக்கோட்டை,

காவிரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாவிட்டால் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக காவிரி டெல்டாவில் விவசாயிகள் கருப்புக்கொடி காட்டும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

இது குறித்து மன்னார்குடியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா தொடர்ந்து 7-வது ஆண்டாக வறண்டு கிடக்கிறது. 6 ஆண்டுகள் கர்நாடகம் சதி செய்து தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசும், பொதுப்பணித்துறையும் திட்டமிட்டு சதி செய்கிறது. இதனால் நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்ய விடப்பட்ட நாற்றுகள் கருகத் தொடங்கி விட்டது. கொள்ளிடத்தில் கரை புரண்டு ஓடிய தண்ணீரால் 100 டி.எம்.சி.க்கு மேல் கடலில் கலந்தது. அதே நேரத்தில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி மூலம் பாசனப் பகுதிகளுக்கு விடுவிக்கப்பட்டும் விளை நிலங்களுக்கு சென்று சேரவில்லை.

இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்து விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். பொதுப்பணித் துறை, வேளாண் துறை, விவசாயிகள் கூட்டுக் கூட்டம் துறை அமைச்சர்கள் தலைமையில் ஆண்டுதோறும் சாகுபடி தொடங்குவதற்கு முன்பு காவிரி டெல்டா மாவட்டங்களில் நடத்தப்பட்டு வந்தது. அந்த கூட்டம் கடந்த ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. உடன் நடத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பார்வையிட்டு பாதிப்புகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும். பாதிப்புகள் குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ஓரிரு நாட்களில் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையா விட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம்.

மத்திய அரசு புதிய கொள்முதல் கொள்கை என்ற பெயரில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்து பொருட்கள் கொள்முதல் செய்வதில் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்களை களமிறக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே இரு கொள்முதல் கொள்கை நடைமுறையில் உள்ளது.

கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசு கொள்கை பூர்வமாக கையாண்டு வரும் நிலையில் புதிய கொள்முதல் கொள்கை என்ற பெயரில் கார்ப்ரேட் நிறுவனங்களை நேரடியாக அனுமதிக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும். இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டு அழிந்து போவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story