தி.மு.க.வினர் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


தி.மு.க.வினர் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 15 Sep 2018 11:15 PM GMT (Updated: 15 Sep 2018 8:30 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க நான் துணை புரிவதால் தி.மு.க.வினர் என்மீது வீண் பழி சுமத்துகிறார்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

அண்ணாவின் பிறந்தநாள் விழாவையொட்டி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் வெங்கிட்டாபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பேரறிஞர் அண்ணாவினால்தான் சாமானியர்களும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களாக முடிந்தது. அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது வசதிவாய்ந்தவர்கள்தான் உயர்ந்த பதவியில் இருக்கும் நிலை இருந்தது. அதனை மாற்றி அமைத்தவர் அண்ணாதான். அவரது வழியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார்கள். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 49 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் மேம்பாலங்கள் அமைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 14 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் ரூ.75 ஆயிரத்தில் வீடு கட்டி கொடுப்பதாக கூறி மக்களை கடனாளியாக்கினார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நானும், அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட பலரும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க உறுதுணையாக இருப்பதால், இந்த ஆட்சியை அகற்ற முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் தி.மு.க.வினர் என்மீது வீண் பழி சுமத்துகிறார்கள். தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என்மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் மனு அளித்துள்ளார். மு..க.ஸ்டாலின் தி.மு.க.வுக்கு மு.க.ஸ்டாலின் வாரிசு தலைவராகியுள்ளார். என்மீதான குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க தவறினால் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு மு.க.அழகிரி அல்லது துரைமுருகன் ஆகியோருக்கு விட்டுகொடுப்பாரா? நான் இதனை சவாலாக கேட்கிறேன்.

கோவையில் 24 மணிநேர குடிநீர் திட்டம் குறித்தும் தவறான தகவலை தி.மு.க.வினர் பரப்புகிறார்கள். மு.க.ஸ்டாலின் சென்னையில் மேயராக பதவி வகித்தபோது அனைத்து பணிகளும் 45 சதவீதம் கமி‌ஷன் அடிப்படையில் நடைபெற்றது. இதுபோன்ற ஆதாரங்களை அரசு அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். ஊழல் செய்த தி.மு.க.வினர், ஊழல் குறித்து பேச தகுதியற்றவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் செ.ம.வேலுசாமி, வர்த்தக அணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராஜு, காலனி கருப்பையா, தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story