விநாயகர் சிலையை கரைக்க கொண்டு சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 28 பேர் படுகாயம்


விநாயகர் சிலையை கரைக்க கொண்டு சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 28 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Sep 2018 11:15 PM GMT (Updated: 15 Sep 2018 9:33 PM GMT)

பென்னாகரம் அருகே, விநாயகர் சிலையை கரைக்க கொண்டு சென்ற சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து பெண்கள் உள்பட 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள காட்டுநாயக்கனஅள்ளி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

இந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக நேற்று அந்த பகுதி பொதுமக்கள் ஒரு சரக்கு வாகனத்தில் அந்த சிலையை வைத்து அவர்களும் வாகனத்தில் சென்றனர். இந்த வாகனம் பென்னாகரம் கோர்ட்டு எதிரே திருந்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற காவேரியம்மாள் (வயது 50), சின்ராஜ் (62), நமீதா (13), நதியா (21), கோகிலா (9), அரிதரன் (18), லாவண்யா (14), சரவணன் (22) மற்றும் டிரைவர் வேலு (29) உள்ளிட்ட 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து, காயம் அடைந்தவர்களை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் வசதி இல்லை. இதனால் அவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலமே தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதனால் சற்று காலதாமதம் ஆனது. எனவே ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story