அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 Sep 2018 12:14 AM GMT (Updated: 16 Sep 2018 12:14 AM GMT)

அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் கீதா எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க. வினர், கரூர் வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது திராவிட இயக்கத்தின் அஸ்திவாரமான அண்ணாவின் புகழ் ஓங்குக... என வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து அருகிலிருந்து எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதை யடுத்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அ.தி.மு.க. வினர், அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், நகர பொருளாளர் ஜூபிடர் பாஸ்கரன், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், தொழிற்சங்க தலைவர் சத்தியமூர்த்தி, மாநில அமைப்புசாரா தொழிலாளர் சங்க செயலாளர் ராயனூர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் கரூர் மனோகரா கார்னர் ரவுன்டானாவிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளப்பட்டி அண்ணாநகரில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் இந்து சிவசாமி, நகர செயலாளர்கள் அண்ணாதுரை, தோட்டம் பஷீர்அகமது உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புன்செய்புகழூர் பேரூர் தி.மு.க. சார்பில் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் அண்ணாவின் உருவப் படத்திற்கு கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். டி.என்.பி.எல். காகித ஆலை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



Next Story