நடத்தையில் சந்தேகம்: மனைவியை மிதித்துக்கொன்ற தொழிலாளி கைது


நடத்தையில் சந்தேகம்: மனைவியை மிதித்துக்கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 16 Sep 2018 11:00 PM GMT (Updated: 16 Sep 2018 12:50 PM GMT)

அருப்புக்கோட்டையில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை மிதித்துக்கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி குமரன் புதுத்தெருவை சேர்ந்தவர் மாரி (வயது42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரோகமணி (40). இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கூலி வேலை செய்து வருகிறார். இளைய மகன் பிளஸ்–2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாரி குடித்து விட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்து வந்துள்ளார்.

கடந்த 14–ந் தேதியும் இதேபோல தகராறில் ஈடுபட்ட மாரி, மனைவியை அடித்து உதைத்ததோடு காலால் மிதித்துள்ளார். இதில் காயம் அடைந்த ரோகமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தாலும் பலனின்றி மறுநாள் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதைத்தொடர்ந்து தனது மகளை மாரி மிதித்து கொலை செய்து விட்டதாக ரோகமணியின் தந்தை முத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியை கைது செய்தனர்.


Next Story