குடிநீரில் சாக்கடை கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி


குடிநீரில் சாக்கடை கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 16 Sep 2018 10:45 PM GMT (Updated: 16 Sep 2018 8:17 PM GMT)

திருச்சியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி 25-வது வார்டு பகுதியில் பகவதிஅம்மன் கோவில்தெரு உள்ளது. இங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெண்கள் குடிநீர் பிடித்தபோது, அதில் சாக்கடை நீர் கலந்து வந்தது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி களுடன் இணைந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் அங்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story