மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியல்


மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:15 PM GMT (Updated: 16 Sep 2018 8:38 PM GMT)

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார். அவரது உடலை எடுக்க ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அழகிரி பாளையத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் (வயது 42). விவசாயி. இவருக்கு அரியலூர்- திட்டக்குடி மெயின் ரோட்டில் சொந்தமான வயல் உள்ளது. இந்த வயல் காட்டில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். இதை பார்ப்பதற்காக நேற்று தனது வயலுக்கு சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை எதிர்பாராத விதமாக இந்திரகுமார் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் இந்திரகுமார் உடலை வீட்டிற்கு தூக்கி வந்தனர். இதனை அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்திரகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும்படி இந்திரகுமார் உறவினர்களிடம் கூறினர்.

இதையடுத்து போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வெகு நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உறவினர்கள் அரியலூர்-பெரம்பலூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் இந்திரகுமார் உடலை எடுக்க ஆம்புலன்ஸ் வந்து விடும் என்று கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததையடுத்து இந்திரகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story