கொப்பலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு அசைவ உணவு, மதுபானம் படையல் பூர்வீக மராட்டியர்கள் நூதன பூஜை


கொப்பலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு அசைவ உணவு, மதுபானம் படையல் பூர்வீக மராட்டியர்கள் நூதன பூஜை
x
தினத்தந்தி 16 Sep 2018 10:30 PM GMT (Updated: 16 Sep 2018 9:27 PM GMT)

கொப்பலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு அசைவ உணவுகள், மதுபானம் படையலிட்டு, மராட்டியத்தை பூர்வீகமாக கொண்ட மக்கள் நூதன பூஜை நடத்தி வருகிறார்கள்.

கொப்பல், 

கொப்பலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு அசைவ உணவுகள், மதுபானம் படையலிட்டு, மராட்டியத்தை பூர்வீகமாக கொண்ட மக்கள் நூதன பூஜை நடத்தி வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைையயொட்டி கடந்த 13-ந்தேதி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் பொது இடங்களிலும் பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, அதனை நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்து வருகிறார்கள். பொதுவாக இந்து கடவுளான விநாயகருக்கு சைவ உணவுகளை படையலிட்டு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது தான் வழக்கம்.

ஆனால் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு அசைவ உணவுகளையும், மதுபானத்தையும் படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பூர்வீக மராட்டியர்கள்

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கொப்பல் (மாவட்டம்) டவுனில் பாக்யா நகர் உள்ளது. இந்த பகுதியில் சோமவம்சா சகஸ்ரர்ஜுனா சாஸ்திரிய சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது பூர்வீகம் மராட்டியம் ஆகும். இவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை 5 நாட்கள் கொண்டாடுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து அதற்கு வித,விதமான படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

அதுபோல் கடந்த 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தங்களது வீடுகளில் சிவப்பு நிற விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். முதல் நாளில் விநாயகருக்கு கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்ளிட்டவற்றை படையலிட்டனர். 2-வது நாள் சைவ உணவுகளை சமைத்து விநாயகருக்கு படைத்தனர்.

அசைவ உணவு படையல்

3-வது நாளான நேற்று முன்தினம் அவர்கள் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளை சமைத்து விநாயகர் சிலைகளுக்கு படைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சிலர் அசைவ உணவுகளுடன் விநாயகருக்கு மதுபானம் வைத்தும் வழிபாடு நடத்தினர்.

இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி எங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5 நாட்கள் தொடர்ந்து பூஜை நடத்துவோம். பின்னர் நீர்நிலைகளில் அந்த விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வோம். பூஜையின் போது 3-வது நாள் அசைவ உணவுகள், மதுபானம் படையலிடுவோம். இந்த நடைமுறை இன்று... நேற்று... அல்ல எங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வருகிறோம் என்றனர்.

Next Story