மழையூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 8-ம் வகுப்பு மாணவர் சாவு


மழையூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 8-ம் வகுப்பு மாணவர் சாவு
x

மழையூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 8-ம் வகுப்பு மாணவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதனால் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள மேலபொன்னன்விடுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் மணிகண்டன் (வயது 12).இவர் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மணிகண்டன் தனது வீட்டின் அருகே உள்ள தைலமரக்காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மின்கம்பத்திலிருந்த மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதை கவனிக்காத மணிகண்டன் மின்கம்பியை மிதித்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மணிகண்டனை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மழையூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையறிந்த உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்து மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான போலீசார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். பின்னர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட மணிகண்டன் உடல் மழையூர் கடைவீதி வழியாக சென்று கொண்டிருந்தது.

இதையடுத்து திடீரென ஆம்புலன்சை மறித்த மணிகண்டனின் உறவினர்கள், மின்கம்பி அறுந்து 3 நாட்களாகியும், புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சம்பவம் நடைபெற்று சில மணிநேரம் ஆகியும், மின்வாரிய அதிகாரிகள் நேரில் வராததை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து ஆம்புலன்சு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதையடுத்து மணிகண்டனின் உறவினர்கள் மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 8-ம் வகுப்பு மாணவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழையூர் அருகே கருப்பட்டிபட்டியில் நடந்து சென்ற தங்கம்மாள் என்ற மூதாட்டி மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story