மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 7 அடி குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 7 அடி குறைந்தது
x
தினத்தந்தி 16 Sep 2018 10:43 PM GMT (Updated: 16 Sep 2018 10:43 PM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 நாட்களில் 7 அடி குறைந்துள்ளது.

மேட்டூர்,

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கேரளாவிலும், கர்நாடகத்திலும் கனமழை பெய்தது. கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அந்த அணைகள் நிரம்பின. இதைத்தொடர்ந்து அந்த அணைகளில் இருந்து கடந்த மே மாதம் முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்தை பொறுத்து அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பதும், குறைப்பதுமாக உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்தது. அங்கிருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்து சேர்ந்தது.

அதிகளவில் தண்ணீர் வந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

இதற்கிடையே அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணை உபரிநீர் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டது. உபரிநீர் கடந்த 2013-ம் ஆண்டு இவ்வாறு திறக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உபரிநீர் இவ்வாறு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு கடந்த மாதம் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை வந்தது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் மழை குறைந்தது. எனவே அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 522 கனஅடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 499 கனஅடியாக குறைந்தது.

இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று காலை வினாடிக்கு 22 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது.

அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 6-ந்தேதி அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 114.08 அடியாகவும், நேற்று 113.17 அடியாகவும் இருந்தது. கடந்த 10 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 7 அடி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக வருகிற ஜனவரி மாதம் வரை தண்ணீர் திறந்து விடப்பட வேண்டியதுள்ளது. இந்தநிலையில் அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் பருவமழை கைகொடுத்து டெல்டா பாசன தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

Next Story