மாத்திரைகள் மூலம் உடலுக்குள் செல்லும் மருத்துவ ரோபாட்டுகள்


மாத்திரைகள் மூலம் உடலுக்குள் செல்லும் மருத்துவ ரோபாட்டுகள்
x
தினத்தந்தி 17 Sep 2018 9:28 AM GMT (Updated: 17 Sep 2018 9:28 AM GMT)

உடலுக்குள் மருந்துகளைத் தாங்கிச் செல்லும் ரோபாட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தாவரங்களின் இலை, தண்டுகளின் சாறுகள் அல்லது வேர்கள் மற்றும் மரப்பட்டைகளின் தூள் ஆகியவற்றைக் கொண்டு பல நோய்களுக்கான சிகிச்சைகளை கண்டறிவதில் தொடங்கியது மனிதர்களின் மருத்துவப் பயணம். ஆனால் இன்று, மனிதனின் கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவுசார் கருவிகள், புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள் வருமுன் காக்க நமக்கு உதவுவது முதல், அவற்றுக்கான மிகச்சிறந்த சிகிச்சைகளை உருவாக்கவும் பயன்படுகின்றன.

வருகிற 2030-ம் ஆண்டில், நுண்ணிய ரோபாட்டுகள் நம் உடல் முழுக்க வலம் வந்து நோய்க்கிருமிகளை, நோய்களை கண்டறியும். மேலும் உடலில் தேவையான இடங்களுக்குக் மருந்துகளை கொண்டு சேர்ப்பது வரை பல மருத்துவச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் என்கிறார் பிரபல எதிர்காலச் சிந்தனையாளர் ரே கர்ஸ்வெய்ல்.

உடலுக்குள் மருந்துகளைத் தாங்கிச் செல்லும் ரோபாட்டுகளை, உடலில் மருந்துகள் தேவைப்படும் பகுதிகளுக்கு மட்டும் செலுத்துவதற்கான வழியை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த பிரச்சினைக்கான ஒரு சுலபமான தீர்வை சர்க்கரை மாத்திரைகள் மூலமாகக் கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர் அமெரிக்காவின் சாண்டியாகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவினர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இதே ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட ஒரு முந்தைய ஆய்வில், நுண்ணிய மோட்டார்கள் கொண்ட, தன்னைத்தானே உந்தித் தள்ளிக்கொள்ளும் திறன்கொண்ட ரோபாட்டுகள் மீது அல்சர்களுக்கான ஆண்டிபயாடிக் மருந்துகளைப் பூசி அவற்றை எலிகளின் உடலுக்குள் செலுத்தி அவற்றின் குடற்புண்களைக் குணப் படுத்த முயன்றனர்.

மருந்துகளைத் தாங்கி எலிகளின் உடலுக்குள் சென்ற நுண் ரோபாட்டுகள் எதிர்பார்த்த படியே அல்சர்களைக் குணப்படுத்தின என்றாலும், துரதிர்ஷ்டவசமாக எலிகளின் செரிமான திரவம் மற்றும் குடல் திரவங்கள் காரணமாக, நுண் ரோபாட்டுகள் புண்களை அடையுமுன்பே மருந்துகளை வெளியேற்றியது. அதுமட்டுமல்லாமல், தண்ணீருடன் கலந்து செலுத்தப்பட்ட சில நுண் ரோபாட்டுகள் எலிகளின் தொண்டையில் சிக்கிக்கொண்டு செயலிழந்துபோனதும் கண்டறியப்பட்டது. இந்த நடைமுறைப் பிரச்சினைக்கு தீர்வுகாண, ஆய்வாளர்கள் லேக்டோஸ் மற்றும் மால்டோஸ் ஆகிய இரண்டு சர்க்கரைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மாத்திரைகளில் ஆயிரக்கணக்கான நுண்ணிய மோட்டார்களை பொருத்தினர்.

அதனை அடுத்து, மோட்டார்கள் பொருத்தப்பட்ட மாத்திரைகள் சோதனைக்கூட எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டன. இந்த ஆய்வில், சிலிக்காவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் நுண்ணிய மோட்டார்கள் கொண்ட மாத்திரைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில், சர்க்கரையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் நுண்ணிய மோட்டார்கள் பொருத்தப்பட்ட ரோபாட்டுகள் அவை தாங்கிச்சென்ற மருந்துகளை குறிப்பிட்ட உடல் பகுதிகளில் வெற்றிகரமாக சேர்த்தன என்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

லேக்டோஸ் மற்றும் மால்டோஸ் ஆகிய இரு சர்க்கரைகளும் மாத்திரை வடிவ மருந்து ரோபாட்டுகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்றால், முதலில் அவை விஷத்தன்மை இல்லாதவை. இரண்டாவதாக, அவற்றை மிக சுலபமாக மாத்திரைகளாக உற்பத்தி செய்ய முடியும். மூன்றாவதாக, இம்மாத்திரைகளை தேவையான சமயத்தில் அழித்துவிட முடியும். இந்த மூன்று பொன்னான காரணங்கள் கொண்ட சர்க்கரை மாத்திரைகள் மூலம் அல்சர் மட்டுமல்லாமல் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான மற்றும் உயிர்கொல்லி நோய்களுக்கான மருந்துகளைத் தாங்கிச் செல்ல உதவும். இந்த நுண்ணிய ரோபாட்டுகள் விரைவில் மனிதர்களின் உடலுக்குள்ளும் சுற்றித் திரிந்து அவசியமான உடல் பகுதிகளில் மருந்துகளை செலுத்தி நோய்களை விரைவில் குணப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Next Story