தூய்மையே சேவை விழிப்புணர்வு ரதம் - கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்


தூய்மையே சேவை விழிப்புணர்வு ரதம் - கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:30 PM GMT (Updated: 18 Sep 2018 9:22 PM GMT)

தர்மபுரியில் தூய்மையே சேவை என்ற விழிப்புணர்வு ரதத்தை கலெக்டர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மையே சேவை என்ற விழிப்புணர்வு ரத தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

தூய்மையே சேவை, உண்மையான சேவை என்ற நோக்கத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது இடங்கள், அரசு கட்டிடங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுற்றுலா தலங்கள், கோவில்கள், பஸ் நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்லூரிகளில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன.

கிராமங்களில் உள்ள தனிநபர் இல்ல கழிப்பறைகள், கிராம பொது சுகாதார வளாகங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை தூய்மையே சேவை திட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் வரலாற்று சிறப்பு மிக்க தூய்மை இந்தியா திட்டமும் அன்றைய தினத்தில் 4-வது ஆண்டை நிறைவு செய்கிறது. தூய்மை இந்தியா திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ரதம் மாவட்டம் முழுவதும் செல்லும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி திட்ட அலுவலர் ராஜமாணிக்கம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சிட்டிபாபு, சந்தானம், சரவணன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story