எம்.ஜி.ஆர். தந்த இயக்கம் ‘‘அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது" அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு


எம்.ஜி.ஆர். தந்த இயக்கம் ‘‘அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 19 Sep 2018 9:30 PM GMT (Updated: 19 Sep 2018 12:27 PM GMT)

‘‘எம்.ஜி.ஆர்.தந்த இயக்கமான அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினா

தூத்துக்குடி, 

‘‘எம்.ஜி.ஆர்.தந்த இயக்கமான அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயசிங்தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, தலைமை கழக பேச்சாளர்கள் சுப்பையாபாண்டியன், கபாலி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:–

பொறுக்க மாட்டோம்

திருச்செந்தூர், உடன்குடியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர், குற்றச்சாட்டுக்கு ஆளான ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் வழங்கப்பட்டு உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அங்கு கட்டப்படும் மணிமண்டபத்தை இடிப்போம் என்று பேசினார்கள். எங்களை பொருத்தவரை ஜெயலலிதா தெய்வம். அவருக்கு கட்டப்படும் கோவிலை இடிப்போம் என்றால் இதை விடவும் கடுமையான வார்த்தையை பயன்படுத்துவோம். நீங்கள்(தி.மு.க.வினர்) ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசினால் நாங்கள் பொறுக்க மாட்டோம். நாங்கள் நாகரீகமாக நடந்து கொள்வோம். ஆர்ப்பாட்டமான அரசியல் செய்ய மாட்டோம்.

அ.ம.மு.க. மீது தாக்கு

தி.மு.க.வில் இருந்து பிரிந்த கட்சி அ.தி.மு.க.. இந்த கட்சி இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. மற்றொரு கட்சி ம.தி.மு.க. அது வாழ்கிறதா, வாழாவெட்டியாக உள்ளதா என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த கட்சியும் இருக்கிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த எந்த கட்சியும் நிலைக்கவில்லை. நீடித்த வரலாறும் கிடையாது. அதே போன்று தற்போது ஒரு கட்சி(அ.ம.மு.க.) ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் அமைச்சர்களை கேலி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆணவத்தோடு இருக்கிறார்கள்.

தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். உங்களை ஓட, ஓட விரட்டப்போகும் தேர்தல்தான் திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல். எங்களை தொகுதிக்கு சென்று விட்டு பத்திரமாக திரும்பி வந்து விடுங்கள் பார்க்கலாம் என்கிறார் தினகரன். நான் குடியிருப்பதே தொகுதியில்தான். அரசு திட்டங்களை மக்கள் வரவேற்கிறார்கள். மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் அ.தி.மு.க.வினர். நீங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் சென்றாலே விரட்டி அடிக்கிறார்கள்.

ஆகையால் அந்த கட்சி நமக்கு போட்டி கிடையாது. நமக்கு ஒரே போட்டி தி.மு.க.தான். அ.தி.மு.க. அண்ணாவின் பெயரில் இருக்கும் இயக்கம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தந்த இயக்கம். இந்த அ.தி.மு.கவுக்கு என்றும் அழிவு கிடையாது. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அண்ணா பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தகுதியான இயக்கமாக அ.தி.மு.க.தான் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

யார்–யார்?

கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, ஆறுமுகநேரி பேரூராட்சி கழக செயலாளர் அரசகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story