காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்


காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 19 Sep 2018 11:30 PM GMT (Updated: 19 Sep 2018 9:38 PM GMT)

காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பக்கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் நிரப்பிட தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்க தொடக்க நிகழ்ச்சி தர்மபுரி டவுன் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், முன்னாள் எம்.பி. பாரிமோகன், மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் சின்னசாமி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் பா.ம.க. மட்டுமே நீர் மேலாண்மை குறித்து பேசி வருகிறது. வெள்ளம் ஏற்படும் போது அந்த நீரை முறையாக சேமித்து வைக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும். வெள்ளத்தை இயற்கை அளிக்கும் வரமாக பார்க்க வேண்டும். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரிநீர் வீணாகிறது.

அண்மையில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 170 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலந்து உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் அதே நேரத்தில் தர்மபுரி மாவட்டத்தில் வறட்சியால் பொதுமக்கள் குடிநீருக்கே சிரமப்படும் நிலை தொடர்கிறது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்காக தர்மபுரி மாவட்டத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்பட வேண்டிய நீரில் 4-ல் ஒரு பங்கு மட்டுமே தற்போது எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 3 பங்கு நீர் எடுக்கப்படவில்லை.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் கரைபுரண்டு ஓடும் உபரிநீரில் 3 டி.எம்.சி. அளவை நீரேற்றம் செய்து மின் மோட்டார்கள் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் நிரப்பினால் இந்த மாவட்டத்தில் வசிக்கும் 15 லட்சம் மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உருவாவதால் விவசாய பணிகளும் செழிக்கும்.

இந்த திட்டத்தால், பென்னாகரம், தர்மபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகள் செழிப்படையும். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, அரூர் பகுதி ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அந்த பகுதிகளும் செழிப்படையும். இந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.400 கோடி செலவாகும்.

தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான இந்த திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க வேண்டும். இந்த கையெழுத்து இயக்கம் மூலம் பெறப்படும் தர்மபுரி மாவட்ட மக்களின் கோரிக்கை தமிழக முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னரும் இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது தலைமையில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வினுபாஜ்ராஜ், நம்பிராஜன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், நாகராஜன், மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் டி.ஜி.மணி, சுப்பிரமணியன், சின்னசாமி, முருகசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story