மாயமான வழக்கில் திருப்பம்: வாலிபரை கொன்று உடலை ஓடையில் வீசிய 5 பேர் கைது


மாயமான வழக்கில் திருப்பம்: வாலிபரை கொன்று உடலை ஓடையில் வீசிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2018 11:02 PM GMT (Updated: 20 Sep 2018 11:02 PM GMT)

ராஜபாளையம் அருகே 4 மாதங்களுக்கு முன்பு மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கழிவுநீர் ஓடையில் வீசப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 32). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பன் பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் அவர் மீது தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாரியப்பனின் தாயார் பஞ்சவர்ணம் அளித்த புகாரின்பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை தேடி வந்தனர்.

இதற்கிடையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாரியப்பனை சிலர் கொலை செய்ததாக ஊருக்குள் தகவல் பரவியது. இதனை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாரியப்பன் தன்னுடைய உறவினர் பெண் ஒருவரை கேலி செய்ததாகவும், தனது நண்பர்களுடன் அதை தட்டி கேட்க சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து ராஜரத்தினம், மாரியப்பனை தாக்கி உள்ளார். உடல் நலமில்லாத நிலையில் இருந்த மாரியப்பன் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார். கொலை செய்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரது சடலத்தை புதைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 20 நாட்களுக்கு முன்பு போலீசாரால் கண்டுபிடிக்கப்படுவோம் என்ற அச்சத்தில், புதைத்த சடலத்தை அதே இடத்தில் வைத்து எரித்துள்ளனர். அப்போது மழை வரவே, வேறு வழியின்றி சாக்கு பைகளில் எரிந்த சடலத்தை கட்டி, ஊருக்கு வெளியே உள்ள கழிவுநீர் ஓடையில் போட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து ராஜரத்தினம் காட்டிய இடத்தின் அடையாளத்தை வைத்து 2 நாட்களாக தேடிய போலீசார், சடலம் இருந்த சாக்குகளை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜரத்தினம், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் செல்வக்குமார், ஜெயக்குமார், நேசக்குமரன், தங்க செல்வம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

Next Story