சேலத்தில் பெண் அதிகாரிக்கு செருப்படி; அச்சக உரிமையாளர் கைது


சேலத்தில் பெண் அதிகாரிக்கு செருப்படி; அச்சக உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2018 11:54 PM GMT (Updated: 20 Sep 2018 11:54 PM GMT)

வீட்டை காலி செய்ய மறுத்ததுடன் அரசு பெண் அதிகாரியை செருப்பால் அடித்த அச்சக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் ரங்கா நகரை சேர்ந்தவர் ரவிகிருஷ்ணன். இவருடைய மனைவி ஜமுனாதேவி (வயது 52). இவர் தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டில் சீனிவாசன் (46) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சீனிவாசன் வீட்டுக்கு ஜமுனாதேவி, அவருடைய மகன் ஹரிபிரசாத் (20) ஆகியோர் சென்றனர். பின்னர் அவர்கள் சீனிவாசனிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களிடயே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த சீனிவாசன், ஜமுனாதேவியை செருப்பால் அடித்ததுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்து தடுக்க வந்த ஹரிபிரசாத்தை அவர் ஹெல்மெட்டால் தாக்கினார். இதுதொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் அரசு பெண் அதிகாரியை செருப்பால் அடித்த சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.

Next Story