தர்மபுரியில் பா.ஜனதா சார்பில் இலவச மருத்துவ முகாம்


தர்மபுரியில் பா.ஜனதா சார்பில் இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 Sep 2018 12:03 AM GMT (Updated: 21 Sep 2018 12:03 AM GMT)

தர்மபுரி மாவட்ட பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.

தர்மபுரி,

மாவட்டபொதுச்செயலாளர்கள் செல்லபாண்டியன், சிவன், அழகு, மாவட்ட பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் வரவேற்று பேசினார். பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் இலவச பொருட்களை வழங்கின. ஆனால் மக்களின் உண்மையான மேம்பாட்டுக்கான திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் மின்தட்டுப்பாட்டை போக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் வழங்கி மின் மிகை மாநிலமாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. தமிழகத்தில் மின்சார வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக மத்திய அரசே காரணம் என்று கூறினார். இந்த முகாமில் இதயம், நரம்பு, எலும்புமூட்டு, தண்டுவடம், கண் ஆகிய உறுப்புகளுக்கான பரிசோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோடீஸ்வரன், மத்திய அரசு வக்கீல் சங்கர், வக்கீல் ரமேஷ்வர்மா மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story