கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் குளம் பராமரிக்கப்படாததால் தண்ணீரின்றி கிராம மக்கள் அவதி

கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் குளம் முறையாக பராமரிக்கப்படாததால் தண்ணீரின்றி கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் கீழப்பெரம்பலூர், வேள்விமங்கலம் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஊரின் நடுவில் குளம் வெட்டப்பட்டது. இந்த குளத்து நீரைத்தான் கிராமமக்கள் குடிக்கவும், பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குளம் முறையாக பராமரிக்கப்படாததால் இதில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து காணப் படுகிறது. இதனால் குளத்து நீரை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் சின்னாற்றில் இருந்து இந்த குளத்திற்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும், புல் பூண்டுகள் வளர்ந்தும் உள்ளது. எனவே தற்போது வரவுள்ள பருவமழை காலத்திற்குள் இந்த குளத்தை சீரமைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கிராமமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story