எட்டயபுரம் கான்சாபுரத்தில் பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட வேண்டும் உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்


எட்டயபுரம் கான்சாபுரத்தில் பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட வேண்டும் உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Sep 2018 9:30 PM GMT (Updated: 21 Sep 2018 2:02 PM GMT)

எட்டயபுரம் கான்சாபுரத்தில் புதிதாக பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட வேண்டும் என உதவி கலெக்டர் விஜயாவிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

எட்டயபுரம், 

எட்டயபுரம் கான்சாபுரத்தில் புதிதாக பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட வேண்டும் என உதவி கலெக்டர் விஜயாவிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

உதவி கலெக்டர் ஆய்வு 

எட்டயபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா ஆய்வு மேற்கொண்டார். அவர், 15 வார்டுகளுக்கும் சென்று குடிநீர், கழிப்பிடம், வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படுகின்றனவா?, வாறுகால் தூர்வாரப்பட்டு உள்ளதா?, குப்பைத் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பஸ் நிறுத்த கட்டிடம் 

எட்டயபுரம் கான்சாபுரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக, பஸ் நிறுத்த கட்டிடம் அகற்றப்பட்டது. பின்னர் அந்த பகுதியில் பஸ் நிறுத்த கட்டிடம் கட்டப்படாததால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று, பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அப்பகுதி பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உதவி கலெக்டர் தெரிவித்தார். பின்னர் அவர், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது தாசில்தார் வதனாள், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் உஷா, வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், கிராம நிர்வாக உதவியாளர் மாரியப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story