ஓசூர்: கெலவரப்பள்ளி அணை நிரம்புகிறது - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ஓசூர்: கெலவரப்பள்ளி அணை நிரம்புகிறது - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Sep 2018 11:00 PM GMT (Updated: 21 Sep 2018 7:18 PM GMT)

ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்புவதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 978 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,040 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பின்னர் நேற்று மாலை அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து 560 கன அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், நேற்று மாலை நிலவரப்படி 42.15 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது.

அணையிலிருந்து வினாடிக்கு 720 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரித்தால் அணை நிரம்பும் நிலை உள்ளது. அணை நிரம்புவதன் காரணமாக அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படும். எனவே, முத்தாலி, பூதிநத்தம், குக்கலப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், ஓசூர் அருகே பாத்தகோட்டா தரைப்பாலத்தை, கிராம மக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story