அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால் நடிகை நிலானி மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்


அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால் நடிகை நிலானி மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:00 PM GMT (Updated: 21 Sep 2018 8:23 PM GMT)

அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால் நடிகை நிலானி மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று காதலன் காந்தி லலித்குமாரின் அண்ணன் எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை,

சென்னையில் நடிகை நிலானியின் காதலன் காந்தி லலித்குமார் சில நாட்களுக்கு முன்பு தீக்குளித்து இறந்தார். நடிகை நிலானி நெருக்கமாக பழகிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு தாம் காரணமில்லை என விளக்கமளித்த நிலானி அவருக்கு ஆண்மை இல்லை என்று குற்றம் சாட்டினார்.
நிலானியின் குற்றச்சாட்டுக்கு திருவண்ணாமலையில் வசிக்கும் காந்தி லலித்குமார் அண்ணன் ரகு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

என் தம்பி காந்தி லலித்குமாரும், நடிகை நிலானியும் 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். திருமணமாகாத என் தம்பி நிலானிக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தார். நிலானியின் 2 குழந்தைகளை தன்னுடைய குழந்தை போல் கவனித்து வந்தார்.
நான் இந்த பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை. இதை பெரிதுபடுத்தவும் விரும்பவில்லை. பழி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நிலானி மீது புகார் கொடுத்து வழக்கு தொடுத்து இருப்பேன். இந்த பிரச்சினையை நான் இதோடு நிறுத்திக் கொள்ள தயாராக உள்ளேன்.

அதுபோல நிலானி தரப்பிலும், இந்த பிரச்சினையை நிறுத்திக் கொள்ள வேண்டும். நிலானி என் தம்பியை பற்றி அவதூறு பேச்சுகள் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் மேலும், மேலும் பிரச்சினையை பெரிதுபடுத்தினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.
இல்லாவிட்டால் அவருடன் பழகியவர்கள் யார், யார்?, என் தம்பியிடம் எவ்வளவு பணம் பறித்தார் என்பதற்கான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன். நிலானியின் குழந்தைகள் நலன் கருதி ஆதாரங்களை வெளியிட வேண்டாம் என நினைக்கிறேன். மீண்டும் அவதூறு பரப்பினால் நிலானி மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story