இளம்பெண் கயிற்றால் இறுக்கி கொலை: கணவர் தலைமறைவு


இளம்பெண் கயிற்றால் இறுக்கி கொலை: கணவர் தலைமறைவு
x
தினத்தந்தி 21 Sep 2018 9:45 PM GMT (Updated: 21 Sep 2018 9:20 PM GMT)

மங்கலம் அருகே இளம்பெண் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டார். அவரது கணவர் தலைமறைவாக உள்ளார்.

கலசபாக்கம், 

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் புதூரை சேர்ந்தவர் வாசு, ஓட்டல் தொழிலாளி. இவரது முதல் மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து ஆரணியை சேர்ந்த தேசிங்கு என்பவரின் மகள் உமாவை (வயது 25), வாசு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு உமா அவரது வீட்டில் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், உமா கயிற்றால் கழுத்து இறுக்கி கொல்லப்பட்டதும், அவரது கணவர் வாசு தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்தது.

மேலும் உடலில் காயங்கள் இருந்தன. பின்னர் உமாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உமாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வாசுவை தேடி வருகின்றனர். 

Next Story