சேலம் விமான நிலைய விரிவாக்கம்: குப்பூர் கிராமத்தில் நில அளவீடு பணி மீண்டும் தொடங்கியது


சேலம் விமான நிலைய விரிவாக்கம்: குப்பூர் கிராமத்தில் நில அளவீடு பணி மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 21 Sep 2018 10:30 PM GMT (Updated: 21 Sep 2018 10:02 PM GMT)

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக குப்பூர் கிராமத்தில் நிலஅளவீடு பணி மீண்டும் தொடங்கியது.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் அமைந்து உள்ளது. இந்த விமான நிலையத்தை 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து உள்ளன. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிபாடி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நில அளவீடு செய்யும் பணிகள் தொடங்கின. இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கடந்த ஒரு மாத காலமாக விமான நிலைய விரிவாக்கம் சம்பந்தமான பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று சிக்கனம்பட்டி ஊராட்சியில் குப்பூரில் நிலஅளவீடு செய்யும் பணி மற்றும் கணக்கீடு செய்யும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நில அளவீடு செய்யும் பணியில், நிலஎடுப்பு தாசில்தார்கள் குமரன், சாந்தி, காடையாம்பட்டி தாசில்தார் பெரியசாமி, வருவாய் ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் குப்பூர் கிராம பகுதிக்கு சென்றனர். அங்கு நிலம் எடுக்க சம்பந்தம் தெரிவித்த பட்டதாரர்களின் நிலத்தில் அளவீடு, அங்குள்ள மரங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை கணக்கெடுத்தனர். அப்போது மற்ற விவசாயிகள் இந்த நிலஅளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story