70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியம் கண்டுபிடிப்பு!


70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியம் கண்டுபிடிப்பு!
x
தினத்தந்தி 22 Sep 2018 5:10 AM GMT (Updated: 22 Sep 2018 5:10 AM GMT)

தென்ஆப்பிரிக்காவில் மனித குலத்தின் மிகப் பழமையான ஓவியத்தைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

சுமார் 73 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படும் இந்த ஓவியம், ஒரு கல்லின் மீது குறுக்குக்கோடு போன்று சிவப்பு நிற களிமண் கலவையைக் கொண்டு வரையப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள புலோம்போஸ் என்ற குகையில் ஏறக்குறைய ‘ஹேஸ்டேக்’ (#) வடிவில் காணப்படும் அந்த ஓவியத்தின் சிறு துண்டைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு மனிதகுலத்தின் நவீன அறிவாற்றலின் ஒரு பிரதான உதாரணம் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பழமையான ஓவியங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓவியம்தான் ஆதிகால ஓவியம் என்று நேச்சர் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாறையின் மீது இந்த ஓவியத்தை வரைவதற்கு களிமண்ணால் தயாரிக்கப்பட்ட நிறத்தை வண்ணம் தீட்டும் கோலால் பயன்படுத்தியுள்ளதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இயற்கையாகக் காணப்படும் ஒச்ரே என்னும் களிமண் நிறத்தை சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஓவியம் மிகவும் சிக்கலானதாக இருந்ததாக தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஹென்ஷில்வுட் கூறினார்.

‘‘கண்டெடுக்கப்பட்ட கல்லின் மீதுள்ள குறுக்குக்கோடுகள் ஒழுங்கின்றி முடிவடைவது இந்த ஓவியத்தின் பரப்பு மிகப் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான கிறிஸ்டோபர், நார்வே மற்றும் தென்ஆப்பிரிக்காவில் உள்ள பல்கலைக் கழங்களில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த ஓவியம் குறித்துப் பேசிய விஞ்ஞானிகள், குறிப்பிட்ட ஓவியத்தை கலை என்று அழைக்கவே தயங்குவதாகவும், ஆனால் ஏதோ ஓர் அர்த்தத்துடனே இதை உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்குக் கிழக்கே சுமார் 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புலோம்போஸ் குகையில் சிவப்பு நிற களிமண் பூசப்பட்ட மணிகள், செதுக்கப்பட்ட களிமண் துண்டுகள் ஆகியனவும், ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாயம் தயாரிக்கும் அமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

அறிவியலில் ஹோமோசெபியன்ஸ் என்றழைக்கப்படும் தற்கால மனிதர்கள், தற்போதைய ஆப்பிரிக்காவில் 3 லட்சத்து 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆரம்பம் முதலே கலைக்கும் மனிதனுக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்து வந்திருக்கிறது!

Next Story