‘புதிய இந்தியாவின் மகள்கள் வாரம்’ கொண்டாட முடிவு கலெக்டர் தகவல்


‘புதிய இந்தியாவின் மகள்கள் வாரம்’ கொண்டாட முடிவு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:59 PM GMT (Updated: 22 Sep 2018 10:59 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதம் குறைவதை தடுக்க ‘புதிய இந்தியாவின் மகள்கள் வாரம்’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் குறைந்து வரும் பாலின விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’, ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் 2015-ம் ஆண்டு பாரத பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் பெண் குழந்தைகளை பாதுகாத்து, குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும்.

2015-16-ம் ஆண்டில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் 8-வது இடத்தில் உள்ளது.

இந்த மாவட்டத்தில் 2012-13-ம் ஆண்டு குழந்தை பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 930 பெண் குழந்தைகள் என இருந்தது. தற்போது 2017-18-ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 884 பெண் குழந்தைகளாக குறைந்துள்ளது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’, ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான பணிக்குழு மற்றும் வட்டார அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு உறுப்பினர்களுடன் கலெக்டர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதத்திற்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் அவரது கூட்ட அரங்கில் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பணிக்குழு உறுப்பினர்களுடன் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், வருகிற அக்டோபர் 9 முதல் 14-ந் தேதி வரை “புதிய இந்தியாவின் மகள்கள் வாரம்“ கொண்டாடுவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது, பெண் சிசுக்கொலையை தடுப்பது, கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பதை தடுப்பது குறித்து புதுமையான முறையில், மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மிகவும் பின்தங்கியுள்ள வட்டாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பதை தவிர்க்கவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஏற்படுத்தவும், குறைந்து வரும் பாலின விகிதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story