ஒரு மாதத்துக்கு பின் முக்கொம்பு சுற்றுலா மையம் திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்


ஒரு மாதத்துக்கு பின் முக்கொம்பு சுற்றுலா மையம் திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 23 Sep 2018 10:45 PM GMT (Updated: 23 Sep 2018 6:49 PM GMT)

முக்கொம்பு சுற்றுலா மையம் ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்டது. ராட்டினம், ஊஞ்சல்களில் ஆடி சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே முக்கொம்பில் உள்ள சுற்றுலா மையத்திற்கு விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி இரவு முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் அணையில் 6 முதல் 14 வரை இருந்த 9 மதகுகள் உடைந்தன. இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணி நடைபெற தொடங்கியது.

சீரமைப்பு பணிக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதாலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும் கடந்த மாதம் முக்கொம்பு சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு நடைபெற்று வரும் பணியை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ராஜாமணி இந்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதியில் இருந்து முக்கொம்பு சுற்றுலா மையம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியிருந்தார். ஆனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பணிகள் முடியாமல் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், சுற்றுலா மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.

முக்கொம்பு சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும், சுற்றுலா மையத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை. அப்படி வந்த சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா மையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், பஸ் நிலையம், ரெயில்வே நிலையம், அந்த பகுதியில் உள்ள கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர்.

கடந்த ஒரு மாத காலமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த முக்கொம்பு சுற்றுலா மையம் நேற்று காலை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. சுற்றுலா மையம் திறக்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள், நேற்று காலை முதலே சுற்றுலா மையம் நோக்கி படையெடுத்தனர். இதனால் கடந்த ஒரு மாத காலமாக வெறிச்சோடி கிடந்த சுற்றுலா மையம், நேற்று களைகட்டியது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் முக்கொம்பு முன் பகுதியில் உள்ள பூங்கா வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பூங்காவில் உள்ள ராட்டினங்கள், சிறுவர் ராட்டினங்கள், ஊஞ்சல்கள் போன்றவற்றில் ஆடி மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், குளிப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளித்து மகிழ்ந்தனர்.

பாலத்தில் தற்காலிக சீரமைப்புப் பணி நடைபெறுவதால், அங்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பொது மக்களுக்கும், பணியில் இருந்த போலீசாருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், வரக்கூடிய நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா மையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை வரை சுற்றுலா மையத்திற்கு செல்ல 2 ஆயிரம் நுழைவு சீட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. பாதுகாப்பு பணியில் ஜீயபுரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story