ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அதிகாரி எரித்துக்கொலை மதுவுக்கு அடிமையான மகன் வெறிச்செயல்


ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அதிகாரி எரித்துக்கொலை மதுவுக்கு அடிமையான மகன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 Sep 2018 11:15 PM GMT (Updated: 23 Sep 2018 7:00 PM GMT)

கரூர் அருகே ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி அதிகாரியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மதுவுக்கு அடிமையான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள என்.புதூர் தெற்குதெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 67). இவர் மாங்காசோளி பாளையத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி மங்கையர்கரசி (62). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுடைய மகன் தங்கவேல் (40). இவருக்கு கீதா (36) என்பவருடன் திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

தங்கவேல் தனது தாய்-தந்தையருடன் சேர்ந்து கூட்டு குடும்பமாகவே வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில் தங்கவேல் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆனார். கடந்த ஜூன் மாதம், பெங்களூருவில் உள்ள மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் ஒரு மையத்தில் அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர். அங்கிருந்து கடந்த 19-ந்தேதி, தங்கவேல் தனது சொந்த ஊருக்கு வந்தார்.

3 மாதங்களாக மதுப்பழக்கத்தை மறப்பதற்கான சிகிச்சை பெற்று வந்த போதும் கூட, மீண்டும் தங்கவேல் மது அருந்த தொடங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், ‘பெண் குழந்தையை வைத்திருக்கும் நீ இப்படி பொறுப்பில்லாமல் சுற்றி திரிகிறாயே’ என குடும்பத்தினர் கண்டித்தனர். இதனையடுத்து தங்கவேல், தனக்கு குடும்ப சொத்தினை பிரித்து தருமாறும், தொழில் செய்து பிழைக்க பணம் தருமாறும் தனது தந்தை கந்தசாமியிடம் கேட்டார். ஆனால் மகனின் நிலைமையை உணர்ந்த கந்தசாமி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இது தொடர்பாக தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தினரிடம் மதுகுடிக்கவும் பணம் கேட்டு தங்கவேல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

தன்னை ஏன் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பினீர்கள்? அங்கு தன்னை சிலர் கொடுமைப்படுத்தியதாகவும் குடும்பத்தினரிடம் அவர் குற்றம் சாட்டினார். மேலும் ஆத்திரத்தில் தனக்கு உதவி செய்ய முன்வராத தந்தையை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்ற தங்கவேல் இரவு 10 மணியளவில் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது கையில் பெட்ரோல் கேனுடன் அவர் வந்திருந்ததை பார்த்து, சந்தேகமடைந்த அவரது மகள் இது எதற்கு? என கேட்டார். அப்போது ஸ்கூட்டருக்கு ஊற்றுவதற்கு தான் வாங்கி வந்துள்ளேன் என கூறி அவர் சமாளித்துள்ளார்.

இரவில் மங்கையர்கரசி, அவரது மருமகள் கீதா, அவரது பேத்தி ஆகியோர் வீட்டின் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த அறையை வெளிப்புறமாக தங்கவேல் பூட்டினார். பின்னர் வீட்டின் மற்றொரு அறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த கந்தசாமியின் மீது தான் வாங்கி வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததில் அய்யோ... அம்மா... என கந்தசாமி அலறினார். இதையடுத்து தங்கவேல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டதும் மங்கையர்கரசி உள்ளிட்டோர் எழுந்தனர். கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் அவர்களால் உடனடியாக கதவை திறந்து வெளியே வர முடியவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு வருமாறு அழைத்தனர்.

அதன் பேரில் அங்கு வந்தவர்கள் மங்கையர்கரசி உள்ளிட்டோரை கதவை திறந்து மீட்டதுடன், தீயில் உடல் கருகிய கந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகனின் வெறிச்செயலால் கணவரை இழந்த மங்கையர்கரசி உள்ளிட்டோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

இது குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். அப்போது தங்கவேல் கேட்கும் போதேல்லாம் பணம் கொடுத்தோம். சம்பவம் நடப்பதற்கு முன்பு கூட எங்களிடம் பணம் வாங்கியிருந்தார். அப்படி இருக்கையில் தந்தையை கொலை செய்ய தங்கவேலுவுக்கு எப்படி மனம் வந்தது என தெரியவில்லை என்று போலீசாரிடம் கந்தசாமி குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது தொடர்பாக வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொலை செய்த தங்கவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story