பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு டிரைவர், கண்டக்டர் கைது


பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு டிரைவர், கண்டக்டர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2018 10:15 PM GMT (Updated: 23 Sep 2018 8:08 PM GMT)

குளச்சலில் அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளச்சல்,

தக்கலையை அடுத்த மணலியை சேர்ந்தவர் ஐயூப், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுகறா பீவி (வயது56). சம்பவத்தன்று ஐயூப் மற்றும் சுகறா பீவி நாகர்கோவிலில் இருந்து குளச்சலுக்கு அரசு பஸ்சில் சென்றனர். பஸ்சை டிரைவர் ஜெயசேகர் ஓட்டி சென்றார். கண்டக்டராக சுரேஷ் பணியில் இருந்தார்.

அந்த பஸ் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு நிறுத்தத்தில் சென்ற போது நின்றது. உடனே ஐயூப் கீழே இறங்கினார். அவரை தொடர்ந்து சுகறா பீவி இறங்கி கொண்டிருந்தார். ஆனால், அவர் இறங்குவதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சுகறா பீவி பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே, அந்த பகுதியில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் சுகறா பீவியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுகறா பீவி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பஸ் டிரைவர் ஜெயசேகர், கண்டக்டர் சுரேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story