பிரதமர் தொடங்கி வைத்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மராட்டியத்தில் 90 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள்


பிரதமர் தொடங்கி வைத்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மராட்டியத்தில் 90 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள்
x
தினத்தந்தி 24 Sep 2018 11:30 PM GMT (Updated: 24 Sep 2018 9:07 PM GMT)

பிரதமர் மோடி தொடங்கி வைத்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மராட்டியத்தில் 90 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள் என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

மும்பை,

ஏழை குடும்பங்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை அறிமுகப்படுத்த போவதாக பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தின் போது அறிவித்து இருந்தார். இதன்படி பிரதமர் மோடி இந்த திட்டத்தை நேற்று முன்தினம் நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை மராட்டியத்தில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையான சாயத்திரியில் நடைபெற்றது.

இதில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:- மராட்டியத்தில் 83 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் 90 சதவீத மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். இந்த திட்டம் மராட்டிய அரசின் மகாத்மா புலே ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும்.

சுதந்திரத்திற்கு பின் நடத்தப்பட்ட ஆய்வில், மக்களின் சராசரி ஆயுள்காலம் 35-ல் இருந்து 70-ஆக உயர்ந்துள்ளது. மேலும் குழந்தை இறப்பு மற்றும் கர்ப்பிணி பெண்களின் இறப்பு பெருமளவு குறைந்துள்ளது.

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் இதே பாதையில், நிலையை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்ல உதவும் இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 10 கோடி மக்களுக்கு உதவும் வகையில் இதே போன்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் பிரதமர் மோடி 50 கோடி மக்களுக்கு உதவக்கூடிய மேம்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்ைத அறிமுகப்படுத்தி உள்ளார். இது உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமாகும்” என்றார்.

Next Story