வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து ரூ.20 லட்சம் கொள்ளையடித்த 6 பேருக்கு சிறை தண்டனை


வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து ரூ.20 லட்சம் கொள்ளையடித்த 6 பேருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 25 Sep 2018 10:30 PM GMT (Updated: 25 Sep 2018 7:28 PM GMT)

வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து, ரூ.20 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் பிரதான சாலையை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது58). இவர், அதே பகுதியில் உரக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 26.9.2014 அன்று ஜெயபிரகாஷ் வீட்டுக்கு அதிகாலையில் சென்ற 6 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவரது வீட்டுக்குள் புகுந்து 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து காரில் தப்பிச்சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருப்பூர் மாவட்டம், தொட்டிப்பட்டி அருகே உள்ள வலையப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி மகன் அருண் (30), கோவை மாவட்டம், உடையகுளம், சேத்துமடையை சேர்ந்த சந்தோஷ்குமார் (35), நடுக்கல் பாளையத்தை சேர்ந்த வெங்கடாஜலபதி (40), பொள்ளாச்சி ஆண்டாள் நகரை சேர்ந்த அக்பர் அலி (39), யானைமலை பகுதியை சேர்ந்த அஸ்கர் (40), கோவை காந்தி நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் சூரியநாராயணன் (38) என்பது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து 6 பேரையும் பாடாலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட சார்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஸ்ரீஜா, அருணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும், மற்ற 5 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story