தாராபுரத்தில் பரபரப்பு சம்பவம்: ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம்-நகைகள் திருட்டு


தாராபுரத்தில் பரபரப்பு சம்பவம்: ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம்-நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 25 Sep 2018 11:08 PM GMT (Updated: 25 Sep 2018 11:08 PM GMT)

தாராபுரத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மற்றும் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அந்த ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

தாராபுரம்,

ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மற்றும் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

தாராபுரம் அலங்கியம் ரோட்டில் வசிப்பவர் ராஜா ராமலிங்கம் (வயது 70). இவர் தாராபுரம் ஜவுளிக்கடை வீதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் மனைவியுடன் சென்றார்.

ராமலிங்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அடுத்த நாள் மீண்டும் சிகிச்சைக்காக வருமாறு கூறியுள்ளனர். இதனால் ராமலிங்கம் அங்கிருந்த நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்துவிட்டு, நேற்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் நேற்று மாலை தனது மனைவியுடன் வீடு திரும்பினார்.

வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த ரூ.8 லட்சம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் தாரா புரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் ராமலிங்கமும், அவரது மனைவியும் வீட்டில் திருட்டு நடந்ததை எண்ணி அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் இருந்தனர். இதனால் அவர்களால் திருட்டுப்போன பணம் மற்றும் நகைகளைப்பற்றியும், அதன் மதிப்பு குறித்தும் துல்லியமாக கணக்கிட்டு கூறமுடியவில்லை. போலீஸ் விசாரணையில், திருட்டு போன பணம் மற்றும் தங்கம், வைர நகைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story