அ.தி.மு.க. அமைச்சர்களின் வரம்பு மீறிய பேச்சால் தமிழகம், தனது புகழை இழந்து வருகிறது


அ.தி.மு.க. அமைச்சர்களின் வரம்பு மீறிய பேச்சால் தமிழகம், தனது புகழை இழந்து வருகிறது
x
தினத்தந்தி 27 Sep 2018 10:45 PM GMT (Updated: 27 Sep 2018 7:36 PM GMT)

அ.தி.மு.க. அமைச்சர்களின் வரம்பு மீறிய பேச்சால் தமிழகம், தனது புகழை இழந்து வருகிறது என்று தஞ்சையில் நடந்த கண்டன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை கலைஞர் அறிவாலயம் எதிரில் உள்ள மைதானத்தில் நேற்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.எல்.ஏக்கள் ராமச்சந்திரன், அன்பழகன், கோவி.செழியன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தீர்மானக்குழு தலைவருமான பொன்.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள ஊழல், ஜனநாயக விரோத ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் நோக்கம். தமிழகத்தை சரியாக வழிநடத்த வேண்டும் என்பதற்குதான் மக்கள், அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அமைச்சர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காகவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு அளித்ததற்காகவும் ஆட்சியை விலையாக கொடுத்த கட்சி தி.மு.க. ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், இன்னல்கள். அதற்காக கலைஞர் எடுத்த நடவடிக்கைகள் இன்றைக்கு உள்ள அமைச்சர்களுக்கு, குறிப்பாக நாக்கை அறுப்பேன் என வரம்பு மீறி பேசிய அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தெரியுமா?. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஈடுகொடுக்கக்கூடிய தலைவர்கள் அ.தி.மு.க.வில் உண்டா?. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஸ்டாலின் வருவது அரசியல், காலத்தின் கட்டாயம். இந்திய அரசியல் வரலாறு எதுவும் தெரியாதவர்கள் தான் தமிழகத்தில் அமைச்சர்களாக உள்ளனர்.

சட்டம் பேசும் அரசு அதிகாரிகள், வரம்பு மீறி பேசும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பார்களா?. கலைக்கப்படவேண்டிய இந்த ஆட்சி நீடிக்கிறது என்றால் யாருக்கோ கைக்கூலிகளாக இந்த ஆட்சி செயல்படுகிறது என்பது தான் உண்மை. இன்றைக்கு அமைச்சர்களின் வரம்பு மீறிய பேச்சால் தமிழகம் தனது புகழை இழந்து வருகிறது.

வரம்பு மீறி பேசி மிரட்டல் விடுப்பவர்களுக்கெல்லாம் பயப்படுகிற கட்சி தி.மு.க. இல்லை. தி.மு.க. பல களம் கண்ட கட்சி. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் தி.மு.க மேற்கொள்ளும். தி.மு.க. என்ற ஒரு மகத்தான இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. இந்த கேலிக்கூத்தான ஆட்சியை மக்கள் தான் அகற்ற வேண்டும். இல்லை என்றால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் நீலமேகம், இறைவன், சண்.ராமநாதன், காரல்மார்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் நீலகண்டன் நன்றி கூறினார்

தஞ்சை தபால் நிலையம் முன்பு இந்த கூட்டத்தை நடத்துவதற்கு தி.மு.க.வினர் போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கலைஞர் அறிவாலயம் முன்பு இந்த கூட்டம் நடந்தது.

Next Story