தூக்குப்போட்டு பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக 6 மாதங்களுக்கு பிறகு கணவர் கைது


தூக்குப்போட்டு பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக 6 மாதங்களுக்கு பிறகு கணவர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2018 11:30 PM GMT (Updated: 28 Sep 2018 9:06 PM GMT)

நாமகிரிப்பேட்டை அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், 6 மாதங்களுக்கு பிறகு கணவர் கைது செய்யப்பட்டார். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராசிபுரம்,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள குரால்நத்தம் விநாயகர் நகர் காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 52). இவரது மனைவி பாக்கியம். ஆனந்தன் மல்லூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது 2-வது மகள் விஜயலட்சுமி (24).

இவருக்கும் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள தண்ணீர் பந்தல்காடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்ராஜ் என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி திருமணம் நடந்தது. அருள்ராஜ் செல்போன் சிம்கார்டு விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். அருள்ராஜ்-விஜயலட்சுமி தம்பதியினருக்கு ரட்சனா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அருள்ராஜ், அவரது மனைவி விஜயலட்சுமிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி கணவன்-மனைவி இருவரும் நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள மெட்டலாவில் தனிக்குடித்தனம் சென்றனர்.

இருந்தாலும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி காலையில் விஜயலட்சுமி அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி விஜயலட்சுமியின் தந்தை ஆனந்தன் நாமகிரிப்பேட்டை போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். இதன்பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் விஜயலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில் விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் நிறைவு அடையாததால் விஜயலட்சுமியின் மரணம் குறித்து நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் விசாரணை நடத்தினார். விஜயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது.

இந்த நிலையில் நாமகிரிப்பேட்டை போலீசார் விஜயலட்சுமியின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அருள்ராஜ்-விஜயலட்சுமி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் விஜயலட்சுமியை அருள்ராஜ் திட்டியதால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதையொட்டி அருள்ராஜை நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கைது செய்தனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு அவரை ராசிபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி அருள்ராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், 6 மாதங்களுக்கு பிறகு கணவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story